சென்னை: திருமலை கோயிலுக்கு வழங்க பெருமாளின் 427 அழகிய முகங்களுடன் கூடிய பட்டு சேலையை காஞ்சிபுரம் நெசவாளர் தயாரித்துள்ளார். காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் தோப்புத் தெருவை சேர்ந்தவர்கள் குமரவேலு- கலையரசி தம்பதியினர். இவர்களிடம் சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், 3வது ஆண்டாக திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கு சமர்ப்பிக்க பட்டுச்சேலை தயாரித்து வழங்க ஆர்டர் கொடுத்தனர். அதன்படி, இரவு பகலாக கடந்த 8 தினங்களாக 4 நெசவாளர்கள், துணையுடன் 192 மணி நேரத்தில் பெருமாளின் 427 பல்வேறு அழகிய முகங்களையும், அரங்கநாதர் லட்சுமி தேவியின் படத்தை பட்டுச்சேலையில் வடிவமைத்துள்ளனர். இதற்கு 21,1/2 முழம் நீளத்தில், ஒரு கிலோ 386 கிராம் எடையில் கொண்ட பட்டு சேலை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சேலையில் பார்ட்டரில் 27 ஜோடி யானைகளும், முந்தானையில் ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்திருக்கும் ரங்கநாதரும், காலடியில் வீற்றிருக்கும் மகாலட்சுமியும், நாபியில் இருந்து வளரும் தாமரைப் பூவில் பிரம்மாவும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் உற்சவர் உருவமும் ஜரிகை இழைகளால் நெய்து சேலையை தயாரித்துள்ளனர்.திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது பெருமாளுக்கு பக்தரால் வழங்கப்படும்.