12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: காலாண்டு தேர்வு முடிவுற்று அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைகல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30ம் தேதியன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை முதல் பருவ விடுமுறை  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி  தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அக்டோபர் 6, 7, 8ம் தேதி ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடு செய்யப்படும்).

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும், தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12ம் தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: