கர்ப்பிணிக்கு வீட்டிலேயே சுகபிரசவம்; 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

கோவை: கோவை கருமத்தம்பட்டியில் நிறைமாத கர்ப்பிணிக்கு வீட்டிலேயே சுக பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர். கோவை கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டர் கோயில் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ். இவரின் மனைவி பேபிதேவி (23).  நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு வீட்டில் இருக்கும்போது நேற்று பனிக்குடம் உடைந்தது. இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்திருந்தது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முருகன், அந்த பெண்ணின் வீட்டிலேயே பைலட் பாண்டி என்பவரின் உதவியுடன் பிரசவம் பார்த்தார். இதில், அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக தாய், சேய் இருவரையும் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Related Stories: