வேலூர்: வேலூரில் பாழடைந்த கட்டிடத்தில் போதிய இடவசதியின்றி இயங்கும் இஎஸ்ஐ டிஸ்பென்சரியை இடம் மாற்ற வேண்டும் என்று தொழிலாளர்களும், இஎஸ்ஐ டிஸ்பென்சரி டாக்டர்கள், பணியாளர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் வேலூரில் தலைமையிட இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, மேல்விஷாரம், வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி என 10 டிஸ்பென்சரிகள் மூலம் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். வேலூர் டிஸ்பென்சரி கோட்டை சுற்றுச்சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் மிகப்பழமையானது என்பதுடன், மழைக்காலங்களில் நீர்க்கசிவுடன், பாசிபடர்ந்து சிதிலமடைந்துள்ளது.