எக்ஸ்பிரஸ்களில் நிரம்பி வழியும் இருக்கைகள்; தென்மாவட்டங்களுக்கு தீபாவளிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: தீபாவளிக்கு அனைத்து தென்மாவட்ட ரயில்களும் நிரம்பி வழிவதால் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இம்முறை தீபாவளி திங்கள் கிழமை வருவதால், சனி, ஞாயிறு விடுமுறையோடு 3 தினங்கள் கொண்டாட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் தென்னக ரயில்வே நெல்லையை மையமாக வைத்து தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம்.

தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களான கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களிலும் தீபாவளி டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை 300ஐ ெதாட்டு உள்ளது.

இந்நிலையில், சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தெற்கு ரயில்வே இதுவரை அக்டோபர் 21ம்தேதி தாம்பரம் - நாகர்கோவில் மார்க்கத்தில் ஒரு சிறப்பு ரயிலை மட்டுமே அறிவித்துள்ளது. 22 மற்றும் 23ம் தேதிகளிலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டால் மட்டுமே தீபாவளி கூட்டத்தை கட்டுப்படுத்த இயலும். குறைந்த கட்டணம், கழிப்பறை வசதி, நிம்மதியான தூக்கம், சரியான நேரம் ஆகியவற்றுடன் பாதுகாப்பானதும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். தீபாவளிக்கு இவ்வாண்டு இணையதளம் மூலம் ஆன்லைனில் அதிக அளவில் பதிவு செய்ததால், முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் இடங்கள் பூர்த்தியாகி விட்டன. இதனால், முன்பதிவு மையங்களில் காத்திருக்கும் சாமானியர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது. எனவே நெரிசல் அதிகமாக உள்ள மார்க்கங்களில், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,‘‘தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளை பயன்படுத்தி தாம்பரத்திலிருந்து ராஜபாளையம், தென்காசி, அம்பை வழியாக நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.

மேலும் தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். தீபாவளியை ஒட்டி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலிருந்து நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். 10 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட்டால்தான் முன்பதிவு பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓரிரு நாட்களுக்கு முன்பு முன்பதிவற்ற சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியிடுவதால் பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. தற்போது தென்னக ரயில்வே சார்பில் நெல்லை - தாம்பரம், நெல்லை - மேட்டுபாளையம் சிறப்பு ரயில்கள் தென்காசி வழியாக இயங்கி வருவதால் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி இப்போதே தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும்.’’ என்றனர்.

Related Stories: