பல்வேறு மாவட்டங்களில் இன்று உலக சுற்றுலா தினம் கடைபிடிப்பு... கரகாட்டம், மயிலாட்டம் ஆடி கலைஞர்கள் அசத்தல்

சென்னை: உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாட்டில் மாமல்லபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக ஐ.நா. சபை கடந்த 1970ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதியை உலக சுற்றுலா தினமாக அறிவித்தது. இதை தொடர்ந்து ஆண்டுதோறும் அந்நாளில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்பேரில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் இணைந்து உலக சுற்றுலா தினத்தை கொண்டாடியது.

அர்ஜுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்டவைகளை ரசிக வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் மாலை அணிவித்து வரவேற்று இனிப்புகளை வழங்கினார். வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டதுடன் முக்கிய வீதிகளில் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். மேலும் கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமியக்கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதேபோன்று கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த பயணிகளுக்கு இனிப்புகள், மலர்கொத்துக்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இதில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உதகை வந்த சுற்றுலா பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு மலைரயிலில் வந்த நூற்றுக்கணக்கான பயணிகள் ரோஜா மலர் மட்டும் இனிப்புகள் கொடுத்து அன்புடன் வரவேற்கப்பட்டனர். இதனால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். உதகை மலை ரயிலின் சிறப்பை பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக ஓவியர் ஒருவர் மலைரயிலில் சுற்றுலா பயணிகள் முன்பாக வரைந்து காட்டினார். நிகழ்ச்சியில் சுற்றுலா துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.          

Related Stories: