யூடியூபர் டி.டி.எப் வாசனுக்கு ஜாமின் வழங்கியது மதுக்கரை கோர்ட்

கோவை: கடந்த 14-ம் தேதி டிடிஎப் வாசன் அவரது இருசக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு எம்.டி.எஸ். பேக்கரி அருகே பைக்கில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் 150 கிலோமீட்டர் வேகத்தில் தான் பைக் ஓட்டுவதையும், இவருக்கு பின்னால் அமர்ந்துள்ள ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல் பயத்தில் அலறுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதே நேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தியது, இதனையடுத்து கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் டி.டி.எஃப் வாசன் மீது 2 வழக்கு, சூலூர் காவல் நிலையத்தில் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்நிலையில் நேற்று யூடியூபர் டி.டி.எப் வாசன் மதுக்கரை கோர்ட்டில் சரணடைந்தார்.

இரண்டு நபர்கள் உத்தரவாதம் கொடுத்ததனை அடுத்து மாலை அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் பின்னால் இருந்து பயணித்ததால் ஜி.பி.முத்து மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

Related Stories: