உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 'தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022'என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அமைச்சர் மதிவேந்தன் Discover Tamil Nadu-2022 என்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களிலுள்ள சுற்றுலா தலங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரசித்திபெற்ற 10 சமூக ஊடகவியலாளர்களின் சுற்றுலா வாகனத்தை (Influencers on Wheels) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்று (27.09.2022) உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022 (Discover Tamil Nadu-2022) என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களிலுள்ள சுற்றுலா தலங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரசித்திபெற்ற 10 சமூக ஊடகவியலாளர்களுக்கு சுற்றுலா விளம்பர பொருட்கள் மற்றும் சுற்றுலா கையேடுகளை வழங்கி, சமூக ஊடகவியலாளர்கள் செல்லக்கூடிய சுற்றுலா வாகனத்தை (Influencers on Wheels) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது: முதலமைச்சர் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அதிகம் முக்கியத்துவம் அளித்து புதுமையான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதனை செயல்படுத்தும் விதமாக சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, உணவுடன் கூடிய உறைவிடம் மற்றும் கேரவன் சுற்றுலா போன்ற திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படவுள்ளன. மேலும், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களின் சமூக வலைதளங்களை அதிக அளவில் மக்கள் பார்வையிடுகின்றனர்.

அதன் மூலம் அவர்கள் கூறும் கருத்துக்கள் சமூக ஊடகம் வாயிலாக அதிக நபர்களுக்கு உடனடியாக சென்றடைகின்றது.  அவ்வாறு உள்ளவர்களில் பத்து நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை சுற்றுலாத்துறை ஊக்குவித்து தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் அதிகம் பிரபலமடையாத சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு தமிழக சுற்றுலாத் தலங்களின் சிறப்புகள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் அவர்கள் பார்வையிட்ட இடங்களின் விவரங்களை தங்களது சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலப்படுத்துகின்றனர்.  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 வலைதள பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இவர்களது சமூக வலைதளங்களை பின்தொடர்பவர்களாக உள்ளனர்.

கடந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று (27-09-2021) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் மாளிகைகளை நினைவுகூறும் வகையில், சுற்றுலாப்பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுடன், பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அந்த வகையில் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினமான இன்று (27.09.2022) சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022 (Discover Tamil Nadu-2022) நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த (மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரகாண்ட், டில்லி, ஒடியா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா) சமூக ஊடகங்களில் பிரபலமான 10 சமூக ஊடகவியலாளர்கள் ஜவ்வாது மலை, ஒகேனக்கல், கொல்லிமலை, பூச்சமருதூர் (கோவை), சேத்துமடை, வால்பாறை, கோயமுத்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதன்மூலம் இச்சுற்றுலாத்தலங்கள் பிரபலமடைந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகைதர வழிவகுக்கும்.  இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர்   டாக்டர் சந்தரமோகன் B இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலாத்துறை இணை இயக்குநர் திரு.ப.புஷ்பராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பொது மேலாளர் திருமதி. லி. பாரதி தேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: