மாநில அரசின் வேலை வாய்ப்பை 100% தமிழர்களுக்கே வழங்கவேண்டும்: நாடார் சங்க சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு நாடார் சங்கங்கள் சார்பில், நாடார் சுயமரியாதை மாநாடு சென்னை சைதாப்பேட்டையில் நடந்தது. தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாடார் சங்க பொதுச்செயலாளர் வி.எல்.சி.ரவி, அமைப்பாளர் மார்க்கெட் ராஜா, காப்பாளர் ஆணைக்குடி செ.வீரக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் சி.பா.பாஸ்கர், தலைமை நிலைய செயலாளர் வ.சி.பொன்ராஜ். இளைஞரணி அமைப்பாளர் பா.வேல்குமார், தேசிய நாடார் கூட்டமைப்பு நிறுவன தலைவர் கு.சிவாஜி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார். தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.என்.ராஜா, பாமக வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வை.வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டில், 130 நாடார் சங்கங்களுக்கு அன்புமணி ராமதாஸ், பட்டிவீரன்பட்டி டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனாரின் விருது வழங்கி கவுரவித்தார். இதையடுத்து, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாளையொட்டி 118 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 1,300 மரக்கன்றுகள், பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளையொட்டி 87 விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர், மலேசிய வாழ் நாடார் சங்கங்கள் ஒத்துழைப்புடன் டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனார் தபால் தலை வெளியிடப்பட்டது. மாநாட்டில், தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தவேண்டும். மாநில அரசின் வேலை வாய்ப்பை 100 சதவீதம் தமிழர்களுக்கே வழங்கவேண்டும்.  தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட வேண்டும். தூத்துக்குடி விமான  நிலையத்துக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயர் சூட்டவேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அ.முத்துகுமார், அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் த.ரவி, தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், ராவணன், ராமசாமி நாடார், தேவ் ஆனந்த் நாடார், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன், சம்பத்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும் பாமக பொருளாளருமான ம.திலகபாமா வரவேற்றார். தமிழ்நாடு நாடார் சங்க துணை கொள்கை பரப்பு செயலாளர் பேச்சிராஜன் நன்றி கூறினார்.

Related Stories: