×

சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை சார்பில் ரூ.6.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை சார்பில் ரூ.6.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள  புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு ஓட்டலில்  4 கோடியே 17 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் கூட்டரங்கம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா அலுவலகக் கட்டடம் மற்றும் மதுரை, கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தர்காவில் 1 கோடியே 80 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலவானியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகும். தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாயிலாக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு ஓட்டலில் தங்கும் விடுதி மற்றும் கூட்டரங்கம்

காவிரிக் கரையில் அமைந்துள்ள அழகிய நகரமான திருச்சிராப்பள்ளி, பல்வேறு வரலாற்று பெருமைகளும், இயற்கை வளமும் ஒருங்கே அமைந்த மாவட்டமாகும். மலைகோட்டையில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயில், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், முக்கியமானதாகவும் கருதப்படும் ஶ்ரீரங்கம், பஞ்சபூத நீர்த்தலமாகிய திருவானைக்காவலும், புகழ்பெற்ற சக்தி பீடமாகிய சமயபுரமும், இயற்கை எழில் கொஞ்சும் பச்சமலை, புளியஞ்சோலை, முக்கொம்பு போன்ற சுற்றுலா தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. ஆண்டு தோறும் திருச்சிராப்பள்ளிக்கு வருகைபுரியும் இலட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில், தமிழ்நாடு ஒட்டலில் 4 கோடியே 17 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் சுமார் 19,238 சதுர அடி பரப்பில் தங்கும் விடுதி மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், தொழில் கூட்டங்கள் நடத்துவதற்கு 110 நபர் இருக்கை வசதி கொண்ட கூட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா அலுவலகக் கட்டடம்

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வரலாற்று நினைவிடங்கள், சிறப்புமிக்க கட்டடங்கள், பழமையான கோயில்கள், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், அண்ணாமலை பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், போர்ச்சுகீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை, சமரச சன்மார்க நெறிகண்ட வள்ளலார் பிறந்த வடலூர் போன்ற இடங்களுக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கும், கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் சிதம்பரம் நகரில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுலா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், கடலூர் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் இவ்வலுவலத்தின் வாயிலாக சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

மதுரை, கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தர்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் வசதிகள்

மதுரை மாநகர், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா தர்கா மற்றும் மஸ்ஜித் வக்ஃப் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனிதத் தலமாகும். இங்கு நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு அதிகளவில் உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிகின்றனர். இத்தர்காவிற்கு வருகைபுரியும் புனித யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில் 1 கோடியே 80 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓய்வுக்கூடங்கள், பொருட்கள் வைப்பறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் ஆகிய  கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., சுற்றுலாத்துறை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் திரு. மு. அன்பழகன், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஆர். வைத்தியநாதன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tourism, Culture and Charities Department , Tourism, Culture, Philanthropy, Building, M.K.Stalin
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்