புளியங்குடி அருகே இடிந்து விழும் நிலையில் அரசு நூலக கட்டிடம்-சீரமைக்க பொதுமக்கள், புரவலர்கள் கோரிக்கை

புளியங்குடி : புளியங்குடி அருகே முள்ளிகுளத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு நூலக கட்டிடத்தை சீரமைத்து தர  வேண்டும் என்று நூலக புரவலர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புளியங்குடி அருகே முள்ளிகுளம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய பொழுதுபோக்கு என்பது நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படிப்பது தான். இதனால், நூலகத்தில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் இருக்கும். இந்த நூலகத்தில் முள்ளிக்குளம் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் தலைவன் கோட்டை, நகரம், மலையடிக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இந்த நூலகத்திற்கு வருகின்றனர்.

இந்த நூலகத்தில் 500 உறுப்பினர்களும், 150 புரவலர்களும் உள்ளனர். இந்நிலையில் நூலக கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாததால் உட்பகுதியில்  உள்ள மேற்கூரை  பல இடங்களில் கான்கிரீட் உடைந்து  கம்பிகள் வெளியில் தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நூலக கட்டிடத்தின் ஒருபகுதி எந்த நேரமும் இடிந்து விழும் சூழல் இருப்பதால் அந்த பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது இதனால், அங்கிருந்த புத்தகங்களை மட்டும் வேறொரு பகுதிக்கு மாற்றி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்களோ, மாணவர்களோ நூலகத்தில் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதற்கு போதுமான இடம் இல்லாத சூழல் உள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலக கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

இந்த நூலகத்தில் மாணவர்களும், பொதுமக்களும் படிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று நூலக புரவலர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: