சென்னை: வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை அரசு கல்லூரிகளில் பயிற்சியில் சேர்க்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள் சென்னையில் உள்ள 4 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில மருத்துவமனைகளில் மட்டுமே பயிற்சி பெற முடியும். இரண்டாவதாக, வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டு பயிற்சி பெறுவதற்காக ரூ.5.20 லட்சம் வசூலிப்பது நியாயமற்றது என்பதை உணர்ந்து அந்த கட்டணத்தை ரத்து செய்து விட்டது தமிழக அரசு. ஆனால், கடந்த ஜூலை 29ம் தேதி அறிவிப்பு வெளியிட்டும், அதை செயல்படுத்துவதற்கான அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தமிழக முதல்வர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.