கொடைக்கானல் : கொடைக்கானலில் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் பிரையன்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை காண சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இரண்டாம் சீசனை அனுபவிக்க பல மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத்தலமாக இருக்கக்கூடிய பூங்காக்களில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
குறிப்பாக நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்க கூடிய பிரையன்ட் பூங்காவில் இரண்டாம் சீசனை வரவேற்கும் விதமாக 100 மலர் படுக்கைகள் மூலம் காஸ்மஸ், அஸ்டர், தெல்பினியம், டோபின் போன்ற பல வகையான வண்ண மலர்கள் பூத்துள்ளன. மேலும் செட்டியார் பூங்காவில் தாவரங்களால் ஆன இதயம், அருவி போன்ற தத்ரூப உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. வரும் வாரங்களில் ஆயுத பூஜை விடுமுறை மற்றும் தீபாவளி உள்ளிட்ட விடுமுறைகள் தொடர்ந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும்.