கரூர்: மேற்குத்திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையை அடுத்த திருவெற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை லேசான சாரலாக தொடங்கிய மழை, திடீரென கனமழையாக உருவெடுத்தது. இதனால் திருவெற்றியூர் நெடுஞ்சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில், அதன்பின் வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதேபோல் கரூர் ஜகதர் பஜார், தான்தோன்றி மலை, குளித்தலை, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது. ஈசாநத்தம், புலியூர் பரமத்தி, புகழூர் உள்ளிட்ட கிராமங்களில் காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.