சென்னை: சென்னை அருகே துடுப்பு படகு போட்டி வெகு உற்சாகமாக நடைபெற்றது. சர்வதேச சுற்றுலா தினம் செப்டம்பர் 27ல் கடைபிடிக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில், சுற்றுலா மறுசிந்தனை என்ற கருப்பொருளில், சுற்றுலாத்துறை இத்தினவிழாவை கொண்டாடுகிறது. இதேபோல், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் முட்டுக்காடு படகு குழாமில் துடுப்பு படகு போட்டி நடைபெற்றது. தனிநபர், தம்பதிகள் மற்றும் படகு குழாம் ஊழியர்கள் என 3 பிரிவாக போட்டிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு பிரிவிலும், முதல், இரண்டாம், மூன்றாம் இடம் என தேர்வாகினர். அனுபவம் இல்லாமல் படகை செலுத்தி தட்டி தடுமாறி இலக்கை அடைந்தது போட்டியாளர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. படகில் இலக்கு தெரியாமல் திகைத்து நின்றவர்களை பார்த்து கரையில் இருந்த உறவினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனுபவம் இல்லாமல் படகை செலுத்தியது வியப்பை ஏற்படுத்தியதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சுற்றுலா தின விழாவிற்காக, முதல்முறையாக இப்போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.