பூந்தமல்லி: போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் விக்ரம். இவரது மகன் பாலாஜி (18), அதே பகுதி அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். படிப்பு செலவிற்காக தினமும் பள்ளி வகுப்பு முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் ஆன்லைனில் உணவு டெலிவரி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பாலாஜி உணவு டெலிவரியை முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். டிரங்க் - பூந்தமல்லி சாலை, முகலிவாக்கம் அருகே சென்றபோது, பின்னால் கலவை ஏற்றி வந்த லாரி பாலாஜியின் பைக்மீது வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறி பாலாஜி கீழே விழுந்துள்ளார். அப்போது, பாலாஜி மீது லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.