தண்டையார்பேட்டை: மூலக்கொத்தளம் காட்பாடா பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் பழமையான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் மொழிப்போர் தியாகிகள், அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் சமாதி உள்ளது. இந்நிலையில் சுடுகாட்டை நவீனப்படுத்தவும், விளையாட்டு மையம் அமைக்கவும் அப்பகுதி மக்கள், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதையடுத்து, மூலக்கொத்தளம் சுடுகாட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் நவீன விளையாட்டு மையம், எஞ்சிய பகுதிகளில் புதிதாக எரிவாயு தகன மேடை ரூ.2.37 கோடி செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமிபூஜையை ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி தொடங்கி வைத்தார். அருகில், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, கவுன்சிலர் வேளாங்கண்ணி, பகுதி செயலாளர் சுரேஷ், வட்ட செயலாளர் கவுரிஸ்வரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.