ஓமலூர்: ஓமலூர் அருகே ஆன்லைனில் வாங்கிய கடனை கட்ட முடியாத வாலிபர், ஊழியர்கள் மிரட்டியதால், குடும்பத்துடன் லாட்ஜில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தின்னப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவர் திருச்சியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்துள்ளார். இவருக்கு திவ்யா(27) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ் குமார், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைனில் பல லட்சம் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனில் ரூ.15 லட்சம் வரை அடைத்துள்ளார். பல மடங்கு பணம் கட்டிய பிறகும், கடன் கொடுத்த கம்பெனியின் ஊழியர்கள், தினமும் சதீஷ்குமாரை செல்போனில் அழைத்து, இன்னும் பணம் கட்ட வேண்டும் என மிரட்டல் விடுத்து வந்தனர்.