இன்ஜினியரிங் 2வது சுற்று கலந்தாய்வு: அக்.10ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: இன்ஜினியரிங் 2வது சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது. அக்டோபர் 10ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக நடக்கிறது. இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 10ம் தேதி தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடக்கிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு நேற்று நிறைவுபெற்றது. அந்த வகையில் முதல் சுற்று கலந்தாய்வில் 13 ஆயிரத்து 893 விண்ணப்பதாரர்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 996 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. அதில் 5 ஆயிரத்து 887 பேர் இடங்களை உறுதி செய்து கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்.

மேலும் 3 ஆயிரத்து 707 பேர் முதன்மை விருப்ப இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் ஏற்கனவே தேர்வு செய்த இடங்களில் இருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உறுதி செய்திருந்த இடத்துக்கான கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும். அந்த வகையில் 3 ஆயிரத்து 707 பேரில், 3 ஆயிரத்து 46 பேருக்கு முதன்மை விருப்ப இடங்களில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், 9 ஆயிரத்து 594 மாணவர்கள் தமிழகம் முழுவதும் 446 இன்ஜினியரிங் கல்லூரிகளில் விருப்பமான படிப்பில் சேர்ந்துள்ளனர். இதை தொடர்ந்து 2வது சுற்று கலந்தாய்வு நேற்று காலை தொடங்கியது. அக்டோபர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2வது சுற்று கலந்தாய்வுக்கு சுமார் 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: