சிங்கப்பூர், தாய்லாந்துக்கு ரூ.20 லட்சம் டாலர்கள் கடத்திய 3 பேர் கைது

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து விமானங்கள் மூலம் அமெரிக்க டாலர் கடத்த முயன்ற 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட இருந்தது. அப்போது சுங்கத்துறையினர் பயணிகளை சோதனை செய்து அனுப்பி வந்தனர். அதில், சென்னையை சேர்ந்த 2 பேர் உள்ளாடைகளில் 20,400 அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இதேபோல், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து பாங்காக் செல்லும் தனியார் விமானத்தில் சென்னையை சேர்ந்த ஒருவரின் உள்ளாடைக்குள் 15,000 ரியால் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மொத்தம் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற 3 பேரிடமும் அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: