தண்டையார்பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், காக்களூரை சேர்ந்தவர் விஜயகுமார் (எ) ரேடியோ விஜி (41), பிரபல ரவுடியான இவர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 9ம்தேதி தான் திருந்தி வாழப்போவதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவுன்குமார் ரெட்டி முன்பு விஜயகுமார் ஆஜராகி நன்னடத்தை பிரமாணப்பத்திரம் எழுதிக் கொடுத்தார். இந்நிலையில், அதை மீறி கடந்த 3ம்தேதி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் ரவுடி விஜயகுமாரை கைது செய்தார். மேலும் நன்னடத்தை விதியை மீறி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக விஜயகுமாரை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டியிடம் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினார். இதில், 167 நாட்கள் திருந்தி வாழ்ந்த நாட்கள் போக 198 நாள் சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து, விஜயகுமாரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.