சென்னை தமிழக கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தில் ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தனிநபர்கள், நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காகவும், இத்துறையில் மற்றவர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கவேண்டுமென்று முடிவுசெய்துள்ளார். இதுபோன்ற விருதுகளை ஆளுநர் மாளிகை வரலாற்றில் வழங்குவது இதுவே முதன்முறையாகும். செப்டம்பர் 24, 2022 முதல் ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சேவைகளை ஆற்றியுள்ள தகுதியுள்ள நிறுவனங்கள், நபர்களிடமிருந்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. இந்த 2 விருதுகளும் சான்றிதழுடன் தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பரிந்துரைகள் அனுப்ப வேண்டிய முகவரி: ஆளுநரின் துணைச் செயலாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், ஆளுநர் செயலகம், ஆளுநர் மாளிகை , கிண்டி, சென்னை - 600 022.