சென்னை: சென்னையில் இருந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா வாகனத்தை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக சட்டப் பேரவையில் அறிவித்தபடி, ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிக சுற்றுலாவினை நேற்று அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அறநிலைய துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், சுற்றுலா துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.