கோயில் பொது அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க அறநிலைய துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையருக்கு அதிகாரமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை முகப்பேரில் உள்ள சந்தான சீனிவாச பெருமாள் கோயிலை நிர்வகிக்கவும், பிற அறப்பணிகளை மேற்கொள்ளவும் ஸ்ரீசந்தான சீனிவாச பெருமாள் பொது அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. கோயிலை நிர்வகிப்பதால் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்து தக்காரை நியமித்து இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் 2015ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் 2015ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார்.

அப்போது, கோயில் தரப்பு வழக்கறிஞர், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டப்படி ஒரு அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவிக்க இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கும், துணை ஆணையருக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது. உதவி ஆணையருக்கு  அதிகாரம் இல்லை. மனுதாரர் அறக்கட்டளையை மத நிறுவனமாக அறிவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் அறக்கட்டளை மத நிறுவனமா, இல்லையா என்று விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தி நான்கு மாதங்களில் அறநிலையத்துறை இணை ஆணையர் கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: