சென்னை: பறிமுதல் செய்த கஞ்சாவை குறித்த காலத்தில் ரசாயன ஆய்வுக்கு அனுப்பாத காவல் துறை மீது அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவர், 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கடந்த பிப்ரவரி 13ம் தேதி அப்பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், சட்டப்பூர்வ ஜாமீன் கோரி சுதர்சன் போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுதர்சன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.