பறிமுதல் செய்தும் குறித்த காலத்தில் கஞ்சாவை ரசாயன ஆய்வுக்கு அனுப்பாததை ஏற்க முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: பறிமுதல் செய்த கஞ்சாவை குறித்த காலத்தில் ரசாயன ஆய்வுக்கு அனுப்பாத காவல் துறை மீது அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவர், 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கடந்த பிப்ரவரி 13ம் தேதி அப்பகுதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், சட்டப்பூர்வ ஜாமீன் கோரி சுதர்சன் போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுதர்சன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வக்கீல்கள் தாங்கள் வாதங்களை முன் வைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, பறிமுதல் செய்த கஞ்சாவை உடனடியாக ரசாயன ஆய்வுக்கு அனுப்பியிருந்தால் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்க முடியும். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பின் ரசாயன ஆய்வுக்கு அனுப்பியதற்கு சரியான காரணங்கள் தெரிவிக்காத நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு நீதிமன்றம், அவகாசம் வழங்கியதை ஏற்க முடியாது. எனவே, சுதர்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: