கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 2 கரடிகள்: பொது மக்கள் பீதி

கோத்தகிரி: கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு கரடிகள் நீண்ட நேரம் ஒரு வீட்டின் முன்பு உலா வரும் சிசிடிவி கேமரா காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் சாலை, குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள், ஒரு வீட்டின் தடுப்பு சுவர் மீது ஏறி வீட்டிற்குள் நுழைந்தது. சுமார் ஒரு மணிநேரம் அந்த வீட்டை சுற்றி சுற்றி வந்த 2 கரடிகளும் அதிகாலை 3.30 மணியளவில் மீண்டும் தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

இக்காட்சியானது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. கடந்த வாரம் இதே குடியிருப்பு பகுதியில் இரண்டு கருஞ்சிறுத்தைகள், 2 சிறுத்தைகள் உட்பட நான்கு சிறுத்தைகள் இதே வீட்டை சுற்றி சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை புலி மற்றும் கரடி  நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்திருப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை, கரடி களை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: