கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்: அரசு பள்ளி தலைமையாசிரியை சஸ்பெண்ட்

மதுரை: மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இ.வேலூரைச் சேர்ந்த ரேணுகாதேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இ.வேலூர் கணவாய்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியை, பள்ளி கழிவறையை சுத்தம் செய்யுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துகிறார்.

இதை, பெற்றோர்களிடம் தெரியப்படுத்தக் கூடாது என்றும், கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்களுக்கு ரூ.10 கொடுக்கிறார். பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு அவரது வீட்டு வேலையை கொடுக்கிறார். இதனால், அப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை செப்.26க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: