சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் இருப்பது ஏன்?..பொதுமக்கள் கேள்வி..!!

டெல்லி: கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கும் போதிலும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் இரு தினங்களுக்கு முன்பு முதல்முறையாக 91.51 அமெரிக்க டாலர் வரை கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இது 95 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் எதிரொலியாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி தொடங்கி 137 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த பொதும் அதற்கேற்ப விலை ஏற்றப்படவில்லை. இதனால் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 14 முதல் 18 ரூபாய் வரையும், ஒரு லிட்டர் டீசலுக்கு 20 முதல் 25 ரூபாய் வரையும் பெட்ரோலிய நிறுவனங்கள் இழப்பை சந்தித்தன.

அதன்பிறகு கிடுகிடுவென கூடுதலாக 10 ரூபாய் வரை எரிபொருள் விலை அதிகரித்தது. ஆனாலும் பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முடியாமல் இருந்தன. கச்சா எண்ணெய் விலை தற்போது சரிந்திருப்பதால் இழப்பை ஈடுகட்டும் நடவடிக்கைகளில் அந்நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எனவே நாட்டில் அதுவரை எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

Related Stories: