கோவை-தென்காசி வழியாக இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர ரயில் மீண்டும் ரத்து

பீளமேடு: மேட்டுப்பாளையம் நெல்லை வாராந்திர ரயில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோடை விடுமுறையை முன்னிட்டு கடந்த மே மாதம் முதல் 3 மாத காலத்துக்கு மேட்டுப்பாளையம் கோவை பொள்ளாச்சி பழனி திண்டுக்கல் மதுரை சிவகாசி தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் ரயில் மறுநாள் சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு நெல்லையை அடையும். மறுமார்க்கத்தில் நெல்லையிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.3 மாத காலத்துக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட இந்த ரயில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி முதல் ரத்து  செய்யப்பட்டது. இதற்கு ரயில் பயணிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் 70 சதவீத பயணிகளுடன் சென்ற அந்த ரயில் ஏன் ரத்து செய்யப்பட்டது என்று ரயில் பயணிகள் சங்கங்கள் தரப்பில் கண்டனம் எழுப்பப்பட்டது.  

இதைத் தொடர்ந்து அந்த வாராந்திர ரயில் ஜூலை 21ம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 19ம் தேதி வரை 5 வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அது நேற்றுடன் முடிவடைந்ததால் அந்த ரயிலை மீண்டும் இயக்குவது குறித்து அறிவிப்பு  ஏதும் இல்லாததால் மேட்டுப்பாளையம் நெல்லை ரயில் 2வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அடுத்த வாரம் அந்த ரயில் இயக்கப்படாது. இது ரயில் பயணிகளிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மேட்டுப்பாளையம் நெல்லை ரயிலில் கடந்த இரண்டு வாரங்களாக முன்பதிவுக்கு டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே ரயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் அந்த ரயிலை நீட்டிக்காமல் ரயில்வே நிர்வாகம் மவுனமாக உள்ளது.

ஆனால் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் கடந்த  ஜூலை மாதம் 12ம் தேதி முதல் 5 மாதங்களுக்கு நீட்டித்து அதாவது நவம்பர் மாதம் வரை நீட்டித்து தென்னக ரயில்வே உத்தரவிட்டது. ஆனால் அதே மாதம் நீட்டிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் நெல்லை வாராந்திர ரயில் 5 வாரங்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு நீட்டிப்பது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.  இதில் தென்னக ரயில்வே பாரபட்சத்துடன் நடப்பதோடு மட்டுமல்லாமல் கோவையை வஞ்சிப்பதாகவும் தெரிகிறது. எனவே ரயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் மேட்டுப்பாளையம் நெல்லை வாராந்திர ரயிலை மீண்டும் இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதை நிரந்தர ரயிலாகவும் மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories: