ஏறுமுகத்தில் நகை விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.38,640-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உயர்த்தியதை அடுத்து, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் சற்று ஆர்வம் காட்டினர்.

ஆனால், கடந்த 12ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீர் உச்சம் அடைந்து, சவரன் ரூ.40 உயர்ந்து, ரூ.39,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் நகை வாங்க பெரிதும் தயக்கம் காட்டினார். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.4,830-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து, ரூ.61.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதனால் சாதாரண மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

Related Stories: