உதகை அருகே 4 வயது சிறுமியை கடித்துக் கொன்ற சிறுத்தை... வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது

நீலகிரி: உதகை அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை கடித்துக்கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

தேனாடுகம்பை பிரிவு அரக்காடு பகுதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாந்த் என்பவரது மகள் சரிதா (வயது 4) தேயிலை தோட்டத்தில் நின்றிருந்தாள்.

அப்போது சிறுத்தை தாக்கியதில் சரிதா படுகாயம் அடைந்தாள். அவளை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் சிறுத்தையை பிடிக்க கேமரா மற்றும் கூண்டு வைத்தனர்.

இந்தநிலையில், தற்போது வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியுள்ளது. பிடிபட்ட சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டு சென்று விட வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: