காங். புதிய தலைவர் பதவி ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிப்பு: ராகுல் மனம் மாறாததால் குழப்பம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் தேதி, ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என கடந்தாண்டு நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தேர்தல் பணிகளை தொடங்குவதற்கான தேதி இன்று முதல் தொடங்குவதால், காங்கிரசின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால், தனது தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அப்போது முதல் இடைக்கால தலைவராக சோனியா பதவி வகிக்கிறார்.

அவருக்கும் உடல் நல பாதிப்பால் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. இதனால், ராகுல் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமென மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ராகுலைப் பொறுத்த வரையில் இன்னமும் அவரது மனநிலையை மாற்றிக் கொள்ளவில்லை என இவர்களில் சிலர் கூறுகின்றனர். எனவே, தலைவர் தேர்தலில் ராகுல் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது. காங்கிரசின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறுகையில், ‘கட்சியின் தேர்தல் வாக்காளர்கள் பட்டியல் தயாராகி விட்டது. தேர்தல் தேதியை காரிய கமிட்டிதான் முடிவு செய்து அறிவிக்கும்,’ என்றார். இதன்படி, ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. செயல் தலைவர்கள் ராகுல் போட்டியிடாத பட்சத்தில் மீண்டும் சோனியாவே கட்சி தலைவராக தொடர்வார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில், அவரது தினசரி கட்சி பணிகளுக்கு உதவ, சில செயல் தலைவர்களாக மூத்த தலைவர்களை அவர் நியமிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: