தமிழ்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க ரூ.5.65 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் நல்ல வடிகால் வசதியுடன் வளமான செம்மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்த களிமண் உள்ள நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் நமது மாநிலம் எண்ணெய் பனை சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாகும். எண்ணெய் பனை மரங்களை நாம் நன்கு பராமரித்து வந்தால், நான்காம் ஆண்டில் இருந்து எக்டேருக்கு 5 டன் வரையும்,  8வது வருடத்தில் இருந்து 25-30 டன் வரையும் நிலையான மகசூல் தரவல்லது. எனவே, தமிழகத்தில் எண்ணெய் பனை சாகுபடி பரப்பை அதிகரித்து, பாமாயில் உற்பத்தியை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதுபற்றிய விவரம் பின்வருமாறு.

1.தேசிய சமையல் எண்ணெய்  இயக்கம் - எண்ணெய் பனை திட்டத்தின் கீழ், நடவுக்கு தேவையான தரமான எண்ணெய் பனை கன்றுகள் முற்றிலும் இலவசமாக விவசாயிகளின் வயல்வெளிக்கே கொண்டு வந்து விநியோகம் செய்வதற்கு தனியார் நிறுவனம் மூலம் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2. நடவு முடிந்து முதல் 4 ஆண்டுகள் வரை இளம் எண்ணெய் பனை மரங்களை நல்ல முறையில் பராமரிப்பதற்காக, ஒரு எக்டேருக்கு ரூ.5250ம், எண்ணெய் பனை வயலில் ஊடுபயிர் சாகுபடி மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக எக்டேருக்கு ரூ.5250ம் ஆக மொத்தம் எக்டேருக்கு ரூ.10,500 மானியமாக  எண்ணெய் பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

3. எண்ணெய் பனைக்கு தேவையான பாசன வசதியை உருவாக்கி தருவதற்காக, ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.50,000ம், டீசல்/மின்சாதன பம்புசெட்கள் நிறுவ சிறு/குறு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.27,000ம், இதர விவசாயிகளுக்கு ரூ.22,500ம், எண்ணெய் பனை வயல்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் அரசு வழங்குகிறது.

4. நடவு செய்த எண்ணெய் பனை கன்றுகளை பாதுகாப்பதற்கு கம்பி வலைக்கு ரூ.20,000ம், பழக்குலைகளை அறுவடை செய்வதற்கான இயந்திரத்திற்கு ரூ.15,000ம், பழக்குலை வெட்டுவதற்காக எடை குறைவான அலுமினிய அரிவாள் கருவிக்கு ரூ.2,500ம், இலைவெட்டும் கருவிக்கு ரூ.50,000ம், சிறிய அளவிலான அலுமினிய ஏணிக்கு ரூ.5,000ம், சிறிய உழுவை இயந்திரத்திற்கு ரூ.2,00,000ம் மானியமாக வழங்கப்படுகிறது.

5. எண்ணெய் பனையின் பழக்குலைகளுக்கு உத்தரவாத கொள்முதல் விலையாக எதிர்வரும் அக்டோபர் மாதம் வரை டன்னுக்கு ரூ.10,516ஆக  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

6. விவசாயிகள் அறுவடை செய்த பழக்குலைகளை சேமித்து எண்ணெய் பிழியும் ஆலைகளுக்கு உடனடியாக அனுப்பும் வகையில், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, எண்ணெய் பனை பழக்குலைகள் சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

7. கொள்முதல் செய்த 15 நாட்களுக்குள் அரசு நிர்ணயித்த விலையில் பழக்குலைக்கான விலையை விவசாயியின் வங்கி கணக்கில் வரவு வைத்திடவும் அரசு வழிவகை செய்துள்ளது. தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை  திட்டத்தின் கீழ் மேற்காணும் பணிகளை மேற்கொள்வதற்காக 2022-23ம் ஆண்டில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலைக்கு உத்தரவாதம், பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் இல்லாதது, 25 முதல் 30 வருடங்களுக்கு நிலையான மாத வருமானம், சாகுபடிக்கு தேவையான அனைத்து பணிகளுக்கும் அரசு மானியம் போன்ற காரணங்களால், எண்ணெய் பனை சாகுபடியானது தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் சிறந்த மாற்றுப்பயிராக கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: