டேராடூன்: ரோட்டில் நாற்காலி போட்டு மது குடித்த பாடி பில்டருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலம், குர்காவ்வை சேர்ந்த பாடி பில்டர் பாபி கட்டாரியா. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமான பாபிக்கு 6.30 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்வோர் உள்ளனர். சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்து இவர் மது குடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்தை நிறுத்தியதற்காகவும், மது அருந்தி போலீசாரை மிரட்டியதற்காகவும், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி போலீசார் மூன்று முறை நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் அரியானாவுக்கு சென்றுள்ளனர்.