திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில், நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த வேலுசாமி மகள் காயத்ரி (22) எம்.பி.பி.எஸ் 5ம் ஆண்டு படித்து வரும் நிலையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இந்த மருத்துவக்கல்லூரி விடுதியின் 2வது மாடியில் காயத்திரி தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை வரை அறை நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனையடுத்து சந்தேகம் அடைந்த சக மானவிகள் இது குறித்து மருத்துவக்கல்லூரி டீன் ஜோசப் ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து காயத்ரி அறை கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பேனில் தனது துப்பட்டாவால் காயத்ரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காயத்திரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை அவர்கள் மருத்துவமனைக்கு வந்து காயத்ரி உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட காயத்திரி மன அழுத்த நோய் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது மகளுக்கு டீன் ஜோசப் ராஜ் விடுமுறை அளிக்காததால் தான் மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்து கொண்ட காயத்ரி தனது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கி உள்ளது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பயிற்சி டாக்டர் தற்கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.