டோக்கியோ: கொரோனாவால் மது விற்பனை சரிந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் கவலை அடைந்துள்ள ஜப்பான் அரசு, இளைஞர்களை அதிகமாக மது குடிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளது. குடி குடியை கெடுக்கும் என்பது நம்ம ஊர்ல மட்டும்தான். ஆனால், ஜப்பானில் இளைஞர்கள் மது அருந்தாமல் இருப்பதால் அந்நாட்டின் அரசுக்கே பிரச்னை உருவாகி உள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஊரடங்கு காரணமாக வர்த்தகம், பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஜப்பானில், குறிப்பாக மதுபான விற்பனை வருவாய் வெகுவாக சரிந்துள்ளது. வருவாய் இழப்பின் காரணம் என்ன என்பதை அந்நாட்டின தேசிய வரி முகமை அமைப்பு கண்டறிந்துள்ளது.