புதுடெல்லி: அட்லாண்டிக் பெருங்கடலில் 8.5 கிமீ அகலத்துக்கு பள்ளம் உருவாகி இருப்பதாகவும், இது கடந்த 6.6 கோடி ஆண்டுகளாக மறைந்து இருந்ததாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆப்பிரிக்காவின் கினியா கடற்கரையில் இருந்து 400 கிமீ தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியில் 1320 அடி ஆழத்தில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று இருப்பதை விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த பள்ளம் 8.5 கிமீ அகலத்தில் உள்ளது. இது, கடந்த 6.6 கோடி ஆண்டுகளாக மறைந்து இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. விண்வெளியில் சுற்றி வந்த சிறிய கிரகம், இப்பகுதி கடலில் விழுந்ததால் ஏற்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தால், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சிறிய கிரகத்தின் தாக்கத்தை நிரூபிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விண்ணில் இருந்து விழுந்த அந்த கிரகம், 400 மீட்டர் அகலம் உள்ளதாக இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.