திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இக்கோயிலில் வரும் 22ம் தேதி காலை கொடியேற்றத்துடன் சதுர்த்தி பெருவிழா துவங்குகிறது. அன்று இரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 2ம் நாள் முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்.