செய்யூர்: தமிழக பள்ளி கல்வித்துறை மதுராந்தகம் கல்வி மாவட்டம் சார்பில், போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் செய்யூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. செய்யூர் ஊராட்சி தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். லத்தூர் ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனைவூர் பாபு கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து, பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் எம்எல்ஏ பனையூர் பாபு, மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது எனவும், போதை பழக்கத்திற்கு அடிமையானால் ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மோகனா, மருத்துவர் செந்தில்குமார், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தயாளன், எழில் ராவணன், விடுதலை அரசு, செந்தமிழ் வளவன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.