அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு, ரன்திக்பூர் கிராமத்தில் நடந்த கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளையும், கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது. கடந்த திங்களன்று இவர்கள் அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.