மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த தீவிரவாதிகள், மும்பையில் நடத்திய தாக்குதலில் ஏராளாமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த மாநிலத்தில் ராய்கட் கடற்கரைக்கு அருகில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் நேற்று சந்தேகத்துக்கு இடமாக ஒரு நவீன படகு நின்றது. இதை பார்த்து மக்கள் அதிர்ந்தனர். படகில் யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ராய்கட் போலீஸ் எஸ்பி அசோக் துதே உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று, படகில் சோதனை நடத்தினர். அதில் இருந்த பெட்டியில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் மூன்றும், அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்களும் இருந்தை கண்டு அதிர்ந்தனர். சுதந்திர தினத்தை சீர்குலைப்பதற்காக வெளிநாட்டு தீவிரவாதிகள் யாராவது வந்து, அப்பகுதியில் ஊடுருவி இருக்கிறார்களா என்று சந்தேகம் எழுந்தது.