புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையில் கர்நாடகாவை சேர்ந்த 2 முதோல் இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம், திம்மாபுராவில் நாய்கள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 2 மருத்துவர்கள், வீரர்கள் இந்த மையத்துக்கு சமீபத்தில் வந்து பார்வையிட்டனர். பின்னர், கடந்த ஏப்ரல் 25ம் தேதி இங்கிருந்து 2 முதோல் இன நாய்க்குட்டிகளை எடுத்து சென்றனர். மோடியின் பாதுகாப்பு படைப் பிரிவில் இவை பயன்படுத்தப்பட உள்ளன. 2 மாத குட்டிகளாக இருந்த இவற்றுக்கு ஏற்கனவே பயிற்சிகள் தொடங்கப்பட்டு விட்டது. முதலில் 4 மாத பயிற்சியும், பின்னர், கடுமையான பயிற்சிகளும் இவற்றுக்கு அளிக்கப்படும்.