சென்னை: 5 ஆண்டுகளில் அடையாளம் தெரியாத 100 உடல்களை அடக்கம் செய்த பெண் காவலரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆமினா என் பெண் காவலர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட அடையாளம் காணமுடியாத மற்றும் யாரும் உரிமை கோராத சடலங்களை (என்ஜிஓ) அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்து நல்ல முறையில் அடக்கம் செய்துள்ளார். இதையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பெண் காவலரின் தொண்டை பாராட்டும் வகையில், பெண் காவலர் ஆமினாவை சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவரது சிறப்பான பணியை போற்றும் வகையில் பண வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் அளித்து கவுரவித்தார்.