சுரானா நிறுவன இயக்குரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வங்கிகளில் 4000 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதான சுரானா குழுமத்தின் இயக்குனர் உள்ளிட்ட மூன்று பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ வங்கியிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்தும் பெற்ற 4000 கோடி ரூபாய் கடன் ெபற்று திருப்பி செலுத்தவில்லை.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக கூறி நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஜூலை 13ம் தேதி நால்வரும் கைது செய்யப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து,  தினேஷ் சந்த் சுரானா, பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில், கைதுக்கு முன்பாக முறையாக நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கவில்லை. தீவிர குற்றம் என்று வகைப்படுத்திவிட்டு அமலாக்கத் துறை விசாரிக்க முடியாது. எனவே, ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரினர். அமலாக்கத் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, அமலாக்கத் துறை என்பது காவல்துறை இல்லை என்பதால் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்கவில்லை.  கைது செய்த போது காரணங்களை கூறி அதில் மனுதாரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடந்து வருவதாலும் 3986 கோடியே 8 லட்ச ரூபாய் தொடர்புடைய முறைகேடு என்பதாலும் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, பெரிய அளவிலான தொகை,  மனுதாரர்களின் நேரடி தொடர்பு, அமலாக்கத் துறை மேலும் பல ஆவணங்களை திரட்ட வேண்டிய அவசியம், ஆதாரங்களை அழிக்கவும், சாட்சியங்களை கலைக்கவும் வாய்ப்பு போன்ற காரணங்களால் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மூவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: