வேலூர்: உலக அமைதிக்காக இந்தியா- அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று, வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த 37வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி சங்கர் விசுவநாதன், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் நாராயணன் முன்னிலை வகித்தனர். அமெரிக்க நாட்டின் சென்னைக்கான துணை தூதர் ஜூடிக் ராவின் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பின் இயக்குநர் சேதுராமன் பஞ்சநாதனுக்கு வி.ஐ.டி பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.