மதுராந்தகம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கே.கே. புதூர் இருசாமநல்லூர் மற்றும் தோட்டநாவல் ஆகிய கிராமங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நேற்றுமுன்தினம் நடந்தன.
இந்நிகழ்ச்சிகளுக்கு, கட்சியின் நிர்வாகி மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கலை கதிரவன், மாநில தொண்டரணி துணை செயலாளர் தனு பார்த்தசாரதி, புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், கே.கே.புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கேக் வெட்டி கூடியிருந்த மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், அப்பகுதியை சேர்ந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் நினைவு பரிசுகள் மற்றும் நோட்டு புத்தகம், பேனா பென்சில் வழங்கப்பட்டன.
இதேபோன்று, இருசாமநல்லூர் பகுதியில் கட்சியின் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. தோட்டநாவல் கிராமத்தில் உள்ள 20 இருளர் குடும்பத்தினருக்கு அரிசி, பால் பாக்கெட், வேட்டி சேலை ஆகியவை என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.