13 வயது சிறுமி பலாத்காரம்; தாயின் 2வது கணவருக்கு 30 வருடம் சிறைதண்டனை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் 2வது கணவருக்கு 30 வருடம் சிறையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்து விட்டார்.

இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த சிறுமிகளின் தாய் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் போது மூத்த மகளை தாயின் 2வது கணவர் மிரட்டி பலாத்காரம் செய்து வந்து உள்ளார். நாளுக்கு நாள் அவரது கொடுமை அதிகரிக்க தொடங்கியது.

அதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் மறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணையின் போது சிறுமியின் தாய் பல்டியடித்தது இந்த வழக்கில் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனாலும் சிறுமியின் தங்கை கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வாலிபருக்கு நீதிபதி வர்கீஸ், ரூ.30 வருடம் சிறையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகை ரூ.1.5 லட்சத்தை சிறுமிக்கு கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: