துபாயில் இருந்து கடத்தி வந்த 300 கிராம் தங்க பிஸ்கெட்டுகளை பறித்து சென்ற கும்பல் கைது: கடலூரில் போலீசார் அதிரடி

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தே.புடைபூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (38) துபாயில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 14ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய பாலையா. அங்கிருந்து கால் டாக்சி மூலம் விருத்தாசலம் அடுத்த பேரளையூரில் உள்ள தனது மாமியார் ராணி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் மாமியாரிடம் ஒரு பெட்டியை கொடுத்து, யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக வைக்கும்படி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் (30) என்பவர் தனது நண்பர்கள் சின்னராசு, விக்னேஷ், ஷாகுல் அமீது, செல்வமணி, இப்ராஹிம், ஜாஹிர், உசேன், ஜெகன் ஆகியோருடன் 2 கார்களில் பாலையா வீட்டுக்கு வந்து அவரது மனைவி முத்துலட்சுமியிடம் பாலையா கொண்டு வந்த பெட்டிகுறித்து விசாரித்தனர். அப்போது முத்துலட்சுமி தனது கணவர் கடந்த சில நாட்களாக வீட்டுக்கே வர வில்லை என அவர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர், தனது தாய் ராணியை செல்போனில் தொடர்பு கொண்டு பெட்டி குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர், பாலையா தன்னிடம் ஒரு பெட்டியை கொடுத்து விட்டு சென்றதாக கூறினார்.

இதை அருகில் இருந்து கேட்ட குமரேசன், அந்த பெட்டியை தே.புடையூருக்குகொண்டு வரும்படி கூறினார். அதன் பேரில் ராணி அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்ததும் அதனை பறித்துக் கொண்ட குமரேசன், அதில் இருந்த தங்க பிஸ்கெட்டுகளை தனது நண்பர்களான இப்ராஹிம், ஜாஹீர், உசேன், ஜெகன் ஆகியோரிடம் கொடுத்து அனுப்பி விட்டு, பாலையாவை தேடினார்.

பெட்டியில் தங்க பிஸ்கெட் இருந்தது குறித்து அறிந்த ராணி இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வேப்பூர் போலீசார் விரைந்து வந்து குமரேசன், சின்னராசு, விக்னேஷ், ஷாகுல்அமீது, செல்வமணி ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதில் கைதான குமரேசன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

துபாயில் வேலை பார்த்து வந்த நான், அங்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி, அதனை தமிழகத்திற்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று வந்தேன். இந்நிலையில், பாலையாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 14ம் தேதி பாலையாவிடம் 100 கிராம் எடை கொண்ட 3 தங்க பிஸ்கெட்டுகளை கொடுத்து, மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும்படியும், அங்கு எனது நண்பர்கள் வந்ததும் அவர்களிடம் கொடுத்துவிடும்படி கூறி அனுப்பி வைத்தேன்.

ஆனால் விமானநிலையத்தில் இறங்கியதும், பாலையா தங்க பிஸ்கெட்டுகளை எனது நண்பர்களிடம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். பாலையாவிடம் இருந்து அதை வாங்கிச் செல்ல வந்தபோது போலீசிடம் சிக்கி கொண்டோம் என வாக்குமூலத்தில் குமரேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க பிஸ்கெட்டுகளுடன் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருந்த பாலையாவையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: