கப்பலூர் டோல்கேட் அலுவலகத்தை நள்ளிரவில் அடித்து நொறுக்கிய வாலிபர்: திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் நகருக்கு அருகே 3 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை செல்லும் மெயின்ரோட்டில் டோல்கேட் அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக திருமங்கலம் உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட்டில் கட்டண விலக்கு அளித்து வந்த டோல்கேட் நிர்வாகம் தற்போது உள்ளூர் வாகனங்களும் கட்டாயம் கட்டணம் செலுத்தி டோல்கேட்டினை கடந்து செல்ல வேண்டும் என நிர்பந்தம் செய்ய துவங்கியதால் பிரச்னை எழுந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தொடரும் இந்த பிரச்னையால், கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகன ஓட்டுநர்களிடம் டோல்கேட் ஊழியர்கள் மோதலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

திருமங்கலம் அருகே சௌடார்பட்டி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (30). அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டி வருகிறார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கப்பலூர் டோல்கேட்டினை காரில் கடக்க முயன்றார். டோல்கேட் ஊழியர்கள், இவரிடம் சுங்க கட்டணம் செலுத்தினால்தான் காரை விடமுடியும் என்று கூறியுள்ளனர். இதற்கு அரவிந்த்குமார் தனது கார் திருமங்கலம் உள்ளூர் வண்டிதான். அதனால் கட்டணம் செலுத்த முடியாது என கூறியுள்ளார். இதனால் டோல்கேட் ஊழியர்களுக்கும், அரவிந்த்குமாருக்கும் பிரச்னை எழுந்தது.

ஆத்திரமடைந்த அரவிந்த்குமார் தனது காரை டோல்கேட் சுங்க வசூல் மையத்தில் நிறுத்திவிட்டு சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த டோல்கேட் ஊழியர்கள் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நேற்று இரவு அரவிந்த்குமார் தனது காரை மீண்டும் எடுக்க கப்பலூர் டோல்கேட் வந்துள்ளார். டோல்கேட் ஊழியர்களிடம் தனது காரை எடுக்க வந்துள்ளேன். கார் எங்குள்ளது என கேட்டுள்ளார். இதற்கு டோல்கேட் ஊழியர்கள், இதுசம்பந்தமாக திருமங்கலம் டவுன் போலீசில் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்று விசாரித்து கொள்ளும்படி அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த அரவிந்த்குமார் டோல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருப்பினும் காரை எடுத்து செல்ல டோல்கேட் ஊழியர்கள் மறுக்கவே ஆவேசமடைந்த கார் டிரைவர் அரவிந்த்குமார் டோல்கேட் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார். இதில் கண்ணாடி ஜன்னல், கம்யூட்டர், நாற்காலிகள் உள்ளிட்டவை சேதமடைந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் டோல்கேட் அலுவலகத்தினை அடித்து நொறுக்கிய டிரைவர் அரவிந்த்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கப்பலூர் டோல்கேட் மேலாளர் ராஜா கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் கார் டிரைவர் அரவிந்த்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories: