ஈரோடு : ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியாக அவர்களை சுற்றுலா அழைத்து செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரவலுக்கு பின் தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் பள்ளிகள் தொடங்கப்பட்ட போதிலும் மலை கிராமங்களில் பழகுடியின குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வருவது சிக்கல் நீடித்து வருகிறது. குடும்ப பொருளாதாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல காரணங்களால் ஈரோடு மாவட்டம் மலை கிராமங்களான பர்கூர், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 100கும் மேற்பட்ட சிறார்கள் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். அவர்கள் பெற்றோர்களுடன் காடுகளில் வேலை செய்தும், ஆடு, மாடுகளை மேய்த்தும், வெளியூர்களில் கூலி வேலை செய்தும் நாட்களை கடத்தி வருகின்றனர். இவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும் கல்வி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும் இடைநின்ற மாணவர்களுக்கு சுடர் தன்னார்வ அமைப்பு கல்வி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.